120 தமிழ் பொலிஸாருக்கு வடக்கில் இடமாற்றம்!!

வடக்கு மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என்று மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையிலேயே தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் ஒரே மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இந்த ஆண்டு இடமாற்றம் பெற்று வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடமாற்றத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய தரப்புகளிடம் மேன்முறையீடு செய்துள்ளனர்.

மேலும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

10 ஆண்டுகள் கடந்தோருக்கு இடமாற்றமில்லை

10 ஆண்டுகள் கடந்தும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லாது யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தில் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts