Ad Widget

ஒரு ரூபாய் செலவின்றி ஒரு கிலோ மீற்றா் வீதியை செப்பனி்ட்டு கிளிநொச்சி இளைஞா்கள் சாதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கிறவல் கொண்டு செல்லும் டிப்பா் வாகனங்களால் சேதமாக்கப்பட்ட வீதியை இளைஞா்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து டிப்பா் வாகனங்களாலேயே புனரமைப்பு செய்துள்ளனா்.

கிளிநொச்சி – அழகாபுாி பகுதியின் ஊடாக செல்லும் பழைய கண்டி வீதியில் உள்ள கொக்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் தற்போது கிரவல் ஏற்ற அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடங்களிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றது. குறித்த பணியில் 75ற்கும் மேற்பட்ட டிப்பா் வண்டிகள் ஈடுபடுவதனால் அப்பகுதி வீதியில் பெரும் குன்றும் குழுகளும் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு ஏற்பட்ட குன்றும் குழியினாலும் பயணிகள் போக்குவரத்து பெரும் பாதிப்பினை எதிர்கொண்ட பொதுமக்கள், சற்று வித்தியாசமாக சிந்தித்து அப்பகுதி இளைஞர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றுக் காலைமுதல் அப்பகுதி ஊடாக கிரவலை ஏற்றிவரும் சகல டிப்பா் வண்டிகளையும் வழிமறித்து தமது நிலமையை தெளிவு படுத்தினர்.

இந்த நிலமைக்கு தீர்வாக நாம் உங்களை கிரவல் ஏற்ற வேண்டாம் என்று மறிக்கவில்லை மாறாக சகல டிப்பர் வண்டிகளும் கண்டிப்பாக ஒரு சுமை கிரவல் இந்த வீதியில் பறித்த பின்பே சேவையில் ஈடுபட முடியும் .

அந்த கிரவல் மூலம் நாம் எமது வீதியினை சீர் செய்கின்றோம் என்று கோரிக்கை முன் வைத்தனர். குறித்த கோரிக்கை நியாயமானது எனக் கண்ட டிப்பர் வண்டிச் சாரதிகள் அனைவரும் ஒவ்வொரு சுமை கிரவலை அவ் வீதிக்கு பறித்து ஒத்துழைத்தனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் 56 டிப்பர் கிரவல் பறிக்கப்பட்ட நிலையில் கரைச்சி பிரதேச சபையின் மோட்டர் கிரைன்டர் மூலம் செப்பனிடப்பட்டது.

இதன்போது ஒரு கிலோ மீற்றர் வீதி ஒரேநாளில் செப்பனிட்டமை அப்பகுதி மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Related Posts