யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை (21) நீதிமன்றம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், புதன்கிழமை (20) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு அருகில் கூடியவர்கள் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்தவர்கள், நீதிமன்ற கட்டடத்துக்கு கற்கள் வீசி கண்ணாடிகளை உடைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணியொருவரின் கார் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பவற்றின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர்.
இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் மேல் நோக்கிய துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கலைத்ததுடன், சிலரைக் கைது செய்தனர்.
அத்துடன், குழப்பம் விளைவித்தவர்கள் கைவிட்டுச் சென்ற வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். வாகனங்களை மீட்க வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரையில் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழப்பத்தால் நீதிமன்ற கட்டடத் தொகுதி சேதமடைந்ததுடன், நீதிமன்றத்துக்கான நீர் விநியோக குழாய் உடைக்கப்பட்டமையால் நீதிமன்றத்துக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது.
சீர் செய்யக்கூடிய விடயங்கள் உடனடியாக சீர் செய்யப்பட்டு, நீதிமன்றம் தற்போது இயங்குகின்றது.