தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரும் தமிழ் மக்களின் கோரிக்கை நியாமானதே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர், காங்கேசன்துறையிலுள்ள கடற்படையின் தலைமையகத்துக்கு சனிக்கிழமை(08) விஜயம் மேற்கொண்டு கடற்படையினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கடற்படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினர்.
அவர் மேலும் கூறுகையில், தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரும் மக்களின் கோரிக்கை நியாயமானதே. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையற்ற காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்படையினர் நாட்டுக்கு செய்து வருகின்ற அர்ப்பணிப்புமிக்க சேவை பற்றி நன்கறிவோம். அதனை வரவேற்று பாராட்டுவதுடன் அந்த சேவையை எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக செய்ய வாழ்த்துகின்றேன்.
யாழ். மாவட்ட செயலகத்தில் மீனவர்களை சந்தித்த போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் முறையிட்டனர். அப்போது கடற்படையால் தான் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
வடக்கு மக்களின் நம்பிக்கையை கடற்படையினர் காப்பாற்ற வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிந்து போகின்றன. அதனை காக்க கடற்படையினரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.