தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் சுகு சிறிதரன், சிறிரெலோ அமைப்பினைச் சேர்ந்த உதயராசா, வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தமிழழகன், மாநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதாக இருந்தவுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.