உடுவில்- அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துளது.
வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பலொன்று, நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் மேற்கொண்டுள்ளது.
5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர், முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்திய கும்பல், தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போது,சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் அங்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.