மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர்.
இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன், ‘நாடாளுமன்றத்தின் மீது எந்த நேரத்திலும் பாரிய தீங்கை விளைவிக்கக்கூடிய ஒன்றாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் இருந்தது. அது, ஜனாதிபதியின் தயவில் நாடாளுமன்றம் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது’ என்றார்.